தொடுவானம்
இதுவரை என்னைப் பயமுறுத்திக் கொண்டிருந்த அம்பாளுக்குப் புதிய உத்யோகம் கொடுத்தேன். அவள் பூச்சாண்டியிலிருந்து எனக்குக் காவல் தெய்வமானாள். தவறு செய்கிறவர்களையெல்லாம் அம்பாள் தண்டிப்பாள் என்ற எண்ணம், எனெக்கெதிராய் நடப்பவர்களையெல்லாம் குறித்துக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யத் தூண்டியது. “இதென்ன முட்டாள்தனம்? உனெக்கெதிராய் செயல்படுபவர்களிடம் நேரடியாய்ச் சண்டையிட்டு ஒன்றுமில்லாமல் செய்வதுதானே வீரத்திற்கு அழகு. அதைவிட்டுவிட்டு அம்பாளிடம் முறையிடுவதில் என்ன பயன்? ”என்று நீங்கள் கேட்கலாம். எப்படிச் சட்டத்தை நம் கைகளில் எடுத்துக்கொள்ள முடியாதோ அதுபோல தர்மமும் நம் கைகளில் எடுத்துக்கொள்ள முடியாத ஒன்று. அம்பாளிடம் முறையிட்டால் என்றாவது ஒருநாள் அம்பாள் நியாயம் கேட்பாள் என்பதே நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் ஒட்டு மொத்த உலகத்தையும் தர்மத்தின் பேரால் நேரடியாகச் சண்டையிட்டுச் சாகாமல் இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
காவலாளியாக இருந்தவளுக்கு அடுத்த பதவி உயர்வுக்கான காலமும் வந்துவிட்டது. பதவியுயர்வு என்றால் வேலைப்பளு கூடுவதும் உலக இயற்கை தானே. ஆமாம்! அவளுக்கு இப்போது நான் கேட்டதெல்லாம் கொடுப்பதே வேலை. அது கிரிக்கெட் விளையாடும் மட்டையாக இருக்கலாம். அல்லது கின்னெஸ் சாதனையில் என் பெயர் இடம் பெறுவதாகக் கூட இருக்கலாம். எது கேட்டாலும் அவள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் ஏதோ என்னால் முடிந்ததைக் காணிக்கையாக, பிரார்த்தனையாகத் திருப்பிக் கொடுப்பேன். இன்று மேலாண்மைக் கோட்பாடுகள் உலகிற்குச் சொல்லித்தருவது, எந்தவொரு வெற்றிக்கும் இலக்கு அவசியம் என்பதே. அந்த இலக்கை நிர்ணயித்துக் கொள்ளப் பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. நமது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரிடம் நமது இலக்கைச் சொல்லிவிட்டு, அதை அடைய நேர்வழியில் முயற்சித்தால் போதும். அந்த முயற்சி தானாகவே வெற்றியை ஈட்டித்தரும். இதை எனக்குச் சொல்லாமல் சொல்லித் தந்தவள் இந்த அம்பாள்.
சில நேரங்களில் எனது இலக்கில் நியாயம் இருப்பதில்லை அல்லது இலக்கை வெகு சீக்கிரமாகக் குறுக்குவழியில் அடையவேண்டுமென்று நினைத்தேன். அப்போதும் நான் கேட்டதெல்லாம் அம்பாள் தரவேண்டுமென்று நினைத்தேன். அம்பாள் மீதான இந்த எதிர்பார்ப்பு, கேட்டதையெல்லாம் தராதபோதும், கேட்காத துன்பத்தைத் தந்தபோதும் கோபத்தை ஏற்படுத்தியது. கோபத்தால் ஒரு பயனும் இல்லாத போதும் கோபம் அம்பாளுக்கும் எனக்குமான உறவைப் பலப்படுத்தியது. அவளிடம் என்னையறியாமல் எனக்கோர் உரிமை வந்தது. இதுவரை பூச்சாண்டியாக, காவல்தெய்வமாக, கேட்டதைக் கொடுப்பவளாய், துயர் துடைப்பவளாய் இருந்தவள், எனக்கு முதல்முறையாகத் தாயார் போலத் தோன்றினாள். இப்போது அவள் என்னிடமிருந்து எந்தச் சடங்கையும் எதிர்பார்ப்பதில்லை. எனக்கும் எந்தச் சடங்குகளும் தேவையாய்த் தோன்றவில்லை. நானும் இதைக்கொடு, அதைக்கொடு என்று இப்போது கேட்பதில்லை. தாய்க்குத் தெரியாதா? பிள்ளைக்கு எப்போது எதைத்தருவதென்று?. நான் எப்போதெல்லாம் பிறருக்கு மனதால்கூட தீங்கு நினையாமல் இருக்கிறேனோ, அப்போதெல்லாம் என்னுடனேயே பயணிப்பாள். எப்போதெல்லாம் நான் தடம் மாறினேனோ, அப்போதெல்லாம் என்னைவிட்டு விலகிவிடுவாள். விலகி விடும்போது அவளை வலுக்கட்டாயமாகத் திருப்தி செய்யவே சடங்குகள் தேவைப்படுகின்றன. அவளையா ஏமாற்ற முடியும்? ஒவ்வொரு முறையும் இவன் உண்மையாகத்தான் மன்னிப்பு கேட்கிறானா, இல்லையா என்று அளந்து விடுவாள். உண்மையில்லாத போது ஒதுங்கி விடுவாள்.
இப்போது அம்பாள் எனக்கு இன்னொரு தாய் என்ற பெருமிதமே எனக்குள் ஆணவத்தைக் குடியேற்றியது. இன்னும் பயத்தில், ஆசையில், கோபத்தில், துயரத்தில் அவளை அணுகுகிறவர்களைப் பார்க்கும்போது ஏளனமாக நினைத்தேன். “ஏன் இவர்கள் இந்தச் சடங்குகளையே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? என்னிடம் வந்தால் நானே கடவுள் யாரென்று சொல்லமாட்டேனா?”என்று அங்கலாய்த்தேன். அம்பாள் என்னைப் பார்த்து, “நீ வந்த வழியை நீயே அலட்சியம் செய்யலாமா? உன் மகனிடமோ அல்லது மகளிடமோ, அம்பாள் உனக்குத் தாயென்று சொல்லிப்பார். அவர்கள் உன்னைக் கைகொட்டிச் சிரிப்பார்கள். என்னை வந்து சேர உன்னைப்போல எந்த இடைத்தரகர்களும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களும் என்னை முதலில் பயத்தில்தான் அணுக வேண்டும். பின்பு தானாய் என் பாசவலைக்குள் வந்துவிடுவார்கள். அதற்குத்தான் இந்தச் சிலைவடிவமும் அத்தனை வழிபாடுகளும். இந்த யாத்திரை ஒவ்வொரு ஆத்மாவிற்கும் தனித்தனியானது” என்றாள். இப்போது தெளிந்தேன். அபிசேகங்களும், ஆராதனைகளும், தேர்த் திருவிழாக்களும், குடமுழுக்குகளும் இந்த யாத்திரைக்கான அச்சாரம்தான்.
இப்போது எனக்கு அம்பாளிடம் பயமுமில்லை, கோபமுமில்லை. அவளோ எனது ஆணவத்தையும், ஆசையும் கொஞ்சம் கொஞ்சமாக வேரறுத்துக் கொண்டிருக்கிறாள். இப்போது எனக்கும் அம்பாளுக்கும் இடையே மிஞ்சியிருப்பது தூய அன்பு ஒன்றுதான். அந்த அன்போடுதான் அவள் கோவிலுக்கு ஓடுவேன். அங்கே போய் அவளுடைய முகத்தில் சின்னப்புன்னகையைக் கண்டுவிட்டால் போதும். உள்ளமெல்லாம் குளிர்ந்து விடும். அந்தப் புன்னகையைக் காணாவிட்டால், அதற்காக அங்கேயே காத்திருப்பேன் அல்லது அவள் வாசலுக்கு மீண்டும் மீண்டும் போவேன். அவளிடம் நான் கேட்டுக்கொண்டதெல்லாம் “இன்பமோ, துன்பமோ எந்த நிலையில் நானிருந்தாலும் என்னோடு வா”என்பதுதான். அவளோ “நீ எப்போதெல்லாம் பேராசைப் படவில்லையோ, எனக்குத்தான் எல்லாம் தெரியுமென்று ஆணவம் கொள்ளவில்லையோ, பிறருக்கு மனதால்கூடத் தீங்கு விளைவிக்கவில்லையோ, பிறரைப் பற்றி அவதூறு பேசவில்லையோ அப்போதெல்லாம் நான் உன்னுடனேயே இருப்பேன்” என்றாள். அவளை என்னுடனேயே தக்கவைத்துக் கொள்ளும் பெருமுயற்சியில் இருக்கிறேன். என்றாவது ஒருநாள் வெற்றி நிச்சயம்!!!
Comments
Post a Comment