அன்பின் வழியது உயிர்நிலை

அந்தமில் இன்பம் நல்கும் அழிவிலா வீடு பேறு பெறுவதற்குச் சான்றோர்களால் சொல்லப்பட்ட உறுதிப்பொருள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு.  இதில் அறம் என்பது அவரவர் தனி மற்றும் பொது வாழ்விற்கேற்ப விதித்தன செய்தலும், விலக்கியன தவிர்த்தலுமாம். பிரம்மச்சர்யம், கிருகஸ்தம் (இல்லறம்), வானப்பிரஸ்தம், மற்றும்  சந்நியாசம் (துறவறம்) என்ற தனிவாழ்வுப் பகுதிகளில் முதலாவதும், மூன்றாவதும் அதற்குப் பிந்தைய நிலைகளுக்குத் தொடக்க நிலைகள். அத்தொடக்க நிலைகளை விடுத்தால் மிச்சமிருப்பவற்றில்  இல்லறம் பற்றுதல், மற்றும் துறவறம் அப்பற்றினை விடுதலுமாம்.

இல்லறம் என்பது அன்புப் பயிற்சிக்களம். இதுவரை அன்பைப் பெற்றுக்கொண்ட ஆணும் பெண்ணும், அதனைப் பகிர்ந்து அன்பென்றால் யாதென அறிந்து கொள்ளுமிடம். அவ்வன்பு மேன்மேலும் பிள்ளைகளிடம்  எந்த வித எதிர்பார்ப்புமின்றி விரிவடைகிறது. இல்லத்திற்குள் விளைந்த இவ்வன்பைச் சமுதாயத்தின்பாற் திருப்பும் முயற்சியின் முதற்படி விருந்து. அவ்விருந்திற்கான அடித்தளம் இன்முகம் மற்றும்  இன்சொற்கள். இப்படி அன்பெனும் ஊற்றைப் பெருக்கித் தன்னை நாடி வரும் மற்றைய மூன்று நிலையினரைக் காத்து அரவணைத்தலே இவ்வறத்தின் மூல நோக்கம். 

பலர் பங்குபெறும் வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவிகளைக் கொண்டும் கொடுக்கும் நிலை வரும். பெற்றுக்கொண்ட உதவிகளுக்கு நன்றி மறவாமை நலம். அதுவே அறம். ஒரு கட்டத்தில் நன்றிக்கடன் பட்டவர்களே நியாயம் தேடி வந்தாலும் அவர்பால் சார்பு நிலையெடுக்காமல் நீதியின்பால் நிற்றல் அறத்தை வளர்க்கும். அப்படி நீதி சொல்வதற்கான அடிப்படைத் தகுதி மெய், மொழி, மனத்தால் தீவழி செல்லாது தன்னைத் தானே அடக்குதல். அப்படி அடக்கத்தால் சிறந்தோர் தத்தம் பொதுவாழ்விற்கிணங்க தொழிலுக்கேற்பவும், இடத்திற்கேற்பவும் சொல்லப்பட்டுள்ள ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் அடுத்த கட்டம். 

பொதுவெளியிற் ஒழுக்கமுடையவராய் இருந்தாலும் மனதில் வெளித்தெரியாது இருக்கும் அழுக்கு மனக்குற்றமாகும். அதில் முதலாவது பிறனுடைய இல்லாளை விரும்புதல். அம்மனக்குற்றத்தை முளையிலேயே கிள்ளியெறிதல் அவசியம். எப்பெரிய குற்றத்தை பிறர் தனக்குச் செய்தாலும், அக்குற்றத்தைப் பொறுத்து மனத்தளவிலும் மன்னித்தல் மாபெரும் மாண்பு. அப்படிப் பொறுக்காமை குற்றம். எல்லோரும் சமமாக இல்லாத இச்சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தவிர்க்க முடியாதது. அப்படித் தாழ்ந்த போதினும் தம்மினும் உயர்ந்தோரைப் பார்த்துப் பொறாமைப்படாது வாழ்தல் இல்லறத்தின் இலக்கணம். அவனிடம் இருக்கும் உயரிய பொருள் நம்மிடமில்லையே என்று அப்பொருளை அவனறியாது கவர்ந்து கொள்ள நினைத்தல் குற்றம். இதுவரை சொல்லிய அனைத்தும் மனக்குற்றங்கள். அடுத்தவர் இல்லாத விடத்து அவர்பற்றிப் புறங்கூறுதலும், பயனில்லாதவற்றைப் பேசிப் பொழுதை வீணாக்குவதும் சொற்குற்றங்கள். அடுத்தது மெய்யால் விளையும் தீவினைகள். அவ்வினைகளைச் செய்ய அஞ்சுதலே மானுடம். மேற்சொல்லப்பட்ட குற்றங்கள் யாவும் அன்பைக் குலைக்கும். அன்பைப் பெருக்க நினைப்போர்க்குத் தேவையற்றவை.

குற்றங்கள் அனைத்தையும் ஒழித்து தன்னைத்தானே சான்றோனாய் ஆக்கிக் தனக்காக வாழத் தொடங்கியவன் தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்காகத் தொண்டு செய்யத் தொடங்குகிறான். இதுபோன்ற பொதுச்சேவைகள் பிறர் அறியச் செய்யப்படுவதால் புகழ் விளையும். இல்லறத்தின் நோக்கம் அன்பை விருட்சமாக்கி இப்புகழை அடைவதுதான். இதனிலும் உயர்ந்த நிலை,  யாரும் அறியாது தனிமனிதர்களுக்கு அவரவர் தேவையறிந்து செய்யும் ஈகை. புகழைக் கூட எதிர்பாராது செய்யப்படும் இப்பண்பே இல்லறத்தானின் உயரிய நிலை. பற்றில் தொடங்கிய இல்லறம், பற்றினை விடப்பழகும் கடைசிப் படிக்கட்டில் வந்து நிற்கும்.

மேற்சொன்ன உதவிகள் செய்ய அடிப்படை பொருள். அப்பொருளை அறத்தின் வழி ஈட்டுதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லுவது பொருட்பால். இல்லறத்தான் கடமைகளை மட்டுமே செய்து கொண்டிருக்காமல், உற்சாகத்திற்காக அறம் பிறழாது இன்பம் உய்ப்பதற்குச் சொல்லப்பட்ட வழிமுறை காமத்துப்பால். இன்பமென்பது ஐம்புலன் அனுபவம். சிலவற்றில் ஒருபுலன் இன்பம் பெறும். சிலவற்றில் இருபுலன்கள் இன்பம் பெறும். ஆனால் ஐம்புலன்களும் ஒருசேர அனுபவிக்கும் இன்பம் ஆணும், பெண்ணும் மனமொன்றி, உடலொன்றி இல்லறத்தில் பெறும் இன்பம். அதனால் இல்வாழ்வின் ஆகச்சிறந்த அவ்வின்பத்தை இன்பத்துப்பால் காட்டுகிறது.

“அறம் வாழும்! மறம் வீழும்!” என்ற விதியிருப்பினும், எதார்த்தத்தில் சில நேரங்களில் நல்லவன் வீழ்கிறான். கெட்டவன் வாழ்கிறான். இதைப் பார்க்கும் பலருக்கு நல்லவராய் இருப்பதை விட வல்லவராய்ப் பிறர் பொருளைக் கவர்ந்து இன்பம் உய்த்தாலென்ன என்ற எண்ணம் வருகிறது. இப்பிறவியின் பலன்களுக்கு மூல காரணம் முந்தைய பிறப்புகளில் நாம் செய்த வினையே. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம் என்கிறது ஊழ். எதுவரினும் நல்வழியில் நின்றால்  நாளடைவில் தீவினை அகன்று நல்வினையே நிலைக்கும் என்பதுதான் வினைக்கொள்கை. 

இப்பூவுலகில் கிடைக்கும் எல்லா இன்பங்களும் ஒரு காலத்திற்குட்பட்ட சிற்றின்பங்கள். எப்படி நிரந்தரமான பேரின்பம் பெறுவது என்பதைச் சிந்தித்த சான்றோர்கள் அதற்காகக் கண்டறிந்த வழி பிறப்பற்ற வீடுபேறு. வீடுபேற்றிற்கான வழிமுறை துறவறம். பொருள் மீதும், இன்பத்தின் மீதுமுள்ள பற்றை முற்றும் முழுதாய் விலக்கி, தன் வாழ்வைப் பிறருக்காக அற்பணிக்கும் அருள் நிலை துறவறம். இல்லறத்தில் தொடங்கிய அன்புப் பயிற்சி தொடர்பில்லாதவர்களை நோக்கியும் பயணப்படுவதுதான் அருள். இவ்வறத்தின் முதற் பகுதி விரதம். அடுத்த பகுதி ஞானம். 

விரதம் என்பது இதுவரை இல்லறத்தின் வழி உய்த்து வந்த இன்பங்களை விடல். அதன் முதற்படி புலால் உணவைத் தவிர்த்தல். அடுத்தது எடுத்துக்கொண்ட குறிக்கோளில் உறுதியாக நிற்கும் தவம். அத்தவத்தில் இருந்து தவறிவிட ஏதுவாகப் பல வாய்ப்புகள் கிடைக்கும். அந்த நிலையிலும் மனம், மொழி, மெய்யை கட்டுக்குள் வைத்தல் அவசியம். உலகம் துறவியை நம்பி பற்பலவற்றைப் பார்வைக்குள்ளாக்கும். அவற்றைக் கவர்ந்து கொள்ள நினையாமை, எந்தவொரு உயிர்க்கும் தீங்கு விளைவிக்காத வாய்மை, பிறர் மீது எந்த நிலையிலும் கோபம் கொள்ளாத தன்மை, பிறவுயிர்களுக்குத் தீங்கு செய்யாத தன்மை, உணவிற்காக மட்டுமன்றி எதற்காகவும் உயிர்களைக் கொல்லாமை என்ற எல்லாப் பண்புகளும் விரதத்தில் அடங்கும்.

விரதத்தில் வெற்றிகண்ட துறவியின் அடுத்த நிலை ஞானம். இப்பிறப்பின் நிலையாமையை ஞானத்தால் உணர்ந்தால் இவ்வுடல் இன்பத்தின் மீதும், புறத்தில் உள்ள செல்வத்தின் மீதும் பற்று நீங்கித் துறவு வாய்க்கும். அப்படித் துறவு வாய்க்கையில் இப்பிறவி கடந்து ஐயம் திரிபின்றி இப்பிறப்பிற்கான காரணம் தொடங்கி, இறப்பைத்தாண்டி மறுபிறப்பு, மேலும் பிறவாத வீடுபேறு போன்ற எல்லாவற்றின் உண்மையையும் ஆன்மா உணரும்.  இந்நிலையே மெய்யுணர்தல். இந்த நிலையை அடைந்தாலும் ஆன்மாவிற்குள் அவித்த வித்து போல ஆசை ஒரு மூலையில் அடங்கிக் கிடக்கும். அது வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் முளைத்துவிடாமல் இருக்க அவா அறுத்தல் அவசியமாகிறது. இதுவே துறவிகள் அடையும் ஞானம்.

இத்துறவிகளே இப்பிரபஞ்சத்தில் எல்லாவற்றையும் ஞானத்தால் உணர்ந்து உயிர்க்குலம் பயன்பெறச் சொல்லத் தக்கவர்கள். அத்துறவிகளில் ஒருவரான திருவள்ளுவர் தானுணர்ந்தவற்றை இவ்வுலகம் பயன்பெற வேண்டிச் சொல்லிப்போனதுதான் திருக்குறள். இந்த ஒட்டுமொத்தப் பாதையையும் உணர்ந்து நாம் நிற்குமிடத்திற்கேற்ற வழிமுறையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் அத்துறவியின் ஆன்மா மகிழ்வுறும்! 

-------


Comments

Popular Posts