திருக்குறளின் அறன் வலியுறுத்தல்

சமீப காலமாக அரசியல் களத்தில் அதிகம் அடிபடுவது திருக்குறளும், திருவள்ளுவரும் தான். தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் அடிநாதமாக ஏற்றுக்கொண்ட காலத்தால் அழிக்க முடியாத ஒரு அரிய பொக்கிசம் திருக்குறள். திருக்குறள் ஆத்திகம் பேசுகிறதா? அல்லது கடவுள் அல்லாத தனிமனித வாழ்வு முறையைப் பேசுகிறதா என்று பார்த்தால் ஆத்திகம் தான் பேசுகிறது. இது ஏதோ ஒரு குறளை வைத்துத்தான் என்று நினைக்க வேண்டாம். ஒட்டுமொத்த நூலின் கருப்பொருளும் ஆத்திகம் தான் பேசுகிறது. ஆனால் அதை ஒத்துக்கொள்வதில் பெரும் சிக்கல் உள்ளது. ஆத்திகம் எனில் கடவுள் பற்றியும், சடங்குகள் பற்றியும் என்று எண்ண வேண்டாம். அது அதையும் தாண்டிய ஆன்மீகத்தைப் பேசுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதை நாத்திகமென ஒத்துக்கொண்டாலும் சிக்கல். ஆத்திகமென்று ஒத்துக்கொண்டாலும் சிக்கல். ஏனென்றால் இவற்றிற்கெல்லாம் முழுக் குத்தகை எடுத்துக்கொண்டு சுய இலாபத்திற்காக பற்பல அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

ஆனால் இவற்றிற்கெல்லாம் சொந்தம் கொண்டாடும் எவரும் வள்ளுவர் சொன்ன வழியில் தங்களது தனிவாழ்வையும் அமைத்துக் கொள்ளவில்லை பொதுவாழ்வையும் அமைத்துக் கொள்ளவில்லை. இங்கே திருக்குறளும், திருவள்ளுவரும் ஓட்டுச்சேகரிக்கப் பயன்படும் கருவிகள் அவ்வளவே! திருக்குறள் போன்ற நெறி நூல் கொண்டாடப்படும் இடத்தில் ஏன் எத்தனை குற்றங்கள்? எல்லோரும் ஒரே நாளில் நல்லவர்களாக ஆகவேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு நிலையென்பது அரிதிலும் அரிது. ஆனால் அத்திசை நோக்கிப் பயணிக்கிறோமா என்றால் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். கடைசி வரை நமக்கு மிஞ்சப்போவது திருவள்ளுவருக்குச் சிலைகளும், வெறும் தெருப்பெயர்களும் தான்.

திருக்குறளை அரசியலுக்கு அப்பாற்பட்டு, சித்தாந்தங்களையெல்லாம் தாண்டி நிறுத்திப்பார்ப்பது அவசியத்திலும் அவசியம். அது உலகின் எல்லா மனிதர்களையும் இணைக்கும் வழி சொல்கிறது. திருக்குறள் எங்களுக்கு சொந்தம், அல்லது எங்கள் சித்தாந்தத்தில் இருந்து வந்தது என்று மார்தட்டிக்கொள்ளும் கட்சிகள், மற்றும் இயக்கங்கள் அதன்படி தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் அவர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம். நாத்திகர்கள் அதன்வழியில் முற்றும் முழுதாக நின்றுகொண்டு கடவுளே இல்லை என்று சொன்னாலும் ஏற்கலாம். அதே சமயம் வேதங்களில் இருந்து வந்தது குறள் என்றுசொல்வோர் அதன் வழி நடந்து காட்டினால் வேதமே முதலென்று ஏற்கச்சொன்னாலும் ஏற்றுவிடலாம்.

என்ன இது புரியாத பேச்சு என்று நீங்கள் கருதலாம். உண்மையில் திருக்குறளை வரிக்கு வரி ஏற்கும் எவராலும் எவர் மீதும் வெறுப்பை அள்ளித் திணிக்கின்ற கருத்தைக் கையிலெடுக்க முடியாது என்பதே உண்மை. உயிர்க்கொலையை தடுக்கிறோம் என்ற கொள்கையுடையோர் மானுட உயிர்களை எடுத்து அதை நிறுவப் பார்க்கும் உலகத்திற்கு திருக்குறள் ஒரு புரியாத புதிர். இனித் திருக்குறளின் அடிப்படையை கொஞ்சம் பார்க்கலாம். இந்த அடிப்படையில் பலவற்றின் சாரம் இருக்கலாம். இருக்கிறது. ஆனால் எதிலிருந்து எது வந்தது என்ற விவாதம் எதற்கும் யாருக்கும் பயன்படாத அரசியலே அன்றி வேறொன்றுமில்லை.

மனிதனாகப் பிறந்தவன் மனம், மொழி, மெய்யால் வினைகளைச் செய்கிறான். இந்த வினைகள்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. அவன் செய்யும் வினைகளை வகைப்படுத்தினால் அது நான்கு வகைக்குள் அடங்கும். அதாவது மற்றவர்களுக்கு அன்புகாட்டிச் செய்யும் செயல்கள், தனக்கு இன்பம் சேர்க்கும் செயல்கள், இவையிரண்டிற்கும் தேவையான பொருள் ஈட்டும் செயல்கள், மற்றும் பிறப்பற்ற நிலையை அடையச் செய்யும் செயல்கள். இதையே அறம், பொருள், இன்பம், வீடு எனச் சான்றோர்கள் வரிசைப்படுத்தினார்கள். இதில் முதல் மூன்றும் நமக்குப் பிரச்சனையில்லை. இப்போதைக்கு நான்காவது வினைப்பிரிவில் நமக்கு நம்பிக்கை இல்லை என்று வைத்துக்கொள்வோம். வீடுபேற்றிற்கான வினையை நேரடியாகச் சொல்லவும் இயலாது. மேற்சொன்ன மூன்று வகையான வினைகளைத் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்ற பால்களாக நூலில் வைத்துள்ளார். திருக்குறள்களை உரையாசிரியர்கள் தான் வரிசைப்படுத்தி அடுக்கியுள்ளனர். அந்த வரிசை என்பது சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரிசை.

அடுத்தது வினையென்பது தனக்கோ பிற உயிர்களுக்கோ நன்மை பயப்பதாக இருக்கலாம். அல்லது தீமை பயப்பதாக இருக்கலாம். அதாவது வினை நல்வினை, தீவினை என இருவகைப்படும். நல்வினையே இந்த உலகிற்கும் உலக உயிர்களுக்கும் நல்லது. சிலவிடங்களில் மட்டும் சிறு தீவினையால் பெரும் நற்பயன் விளைந்தால் அதுவும் நல்வினையாகிறது. தீவினை என்பதைக் கட்டுப்படுத்தா விட்டால் உலகம் ஒழுங்கிலிருந்து தவறி அழிய நேரிடும். அதனை ஒழுங்குபடுத்தச் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றால் எல்லா நேரத்திலும் தனிமனிதனைக் கண்காணித்து நேர்வழியில் நிறுத்துதல் கடினம். அதனால் அந்தத் தனிமனிதனுக்குள் தர்மத்தை அதாவது உலகியல் ஒழுங்கை ஆழமாக விதைத்து அவனைக் கண்காணிக்க ஆளில்லாத போதும் சரியான வழியில் நடக்கவைப்பது அவசியமாகிறது. அந்தப் பணியே அற நூல்கள் செய்கின்றன.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டென்ற கருத்துருவாக்கம் தான் அடிப்படை விதி. இது அறிவியலும், ஆன்மீகமும் ஒத்துக்கொண்ட ஒன்று. நல்லது செய்தால் நன்மை விளையும், தீயது செய்தால் தீமை விளையும் என்ற கருத்துப் புரிதல் இல்லாத மானுடர்கள் இந்த உலக ஒழுங்கிற்கு எதிரானவர்கள். அவர்களால் இந்த உலகிற்கு கேடுதான் விளையும். நாம் என்னதான் சொன்னாலும் நல்லதுசெய்யாதவன் நன்றாக வாழ்வதை சாமானியன் பார்க்க நேர்கிறது. அதேபோல் நல்லவர்கள் கெட்டழிவதையும் கண்கூடாகக் காணமுடிகிறது. அப்போது இயல்பாக நம்முள் வரும் கேள்வி, எதற்காக நல்லது செய்ய வேண்டுமென்பதே. அதற்கு நமது அற நூல்கள் தந்த விடை. இந்த உடல் மட்டுமே இந்தப் பிறப்பிற்கானது. இதைத் தாங்கிவரும் ஆன்மா தோற்றமும், அழிவும் இல்லாதது. ஒவ்வொரு பிறப்பிலும் ஆன்மா தான் அனுபவிக்க வேண்டிய வினைகளுடன் பிறவி எடுக்கிறது. அதனால் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைக்கான பலனை இப்போது அனுபவிக்கிறோம். அதே சமயம் இப்பிறவிகள் செய்யும் வினைகளின் பலன் அடுத்த பிறப்பில் கிடைக்கும். இப்படியாகத் தொடர்ந்து எல்லா வினைகளையும் கழித்தால் வீடுபேறு அதாவது பிறப்பற்ற நிலை கிடைக்கும் என்று சொன்னது. இந்த வினைக்கொள்கையே ஊழியலில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தவிடத்திலும் பலர் முற்பிறப்பு, வீடு பேறு, நல்வினை, தீவினைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கக்கூடும். அவர்களுக்கும் திருக்குறளால் பலன் இருக்கிறது. அதையும் விட்டுவிட்டால் திருக்குறள் தங்களைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்யச் சொல்கிறது. அந்த அன்பு விரிவடைந்து அருளாக மாறி உலகிற்கு நன்மை தரும். அதனால் அழியாப் புகழ் விளையும். அப்படிப் பட்ட புகழ் கிடைக்க எப்படி அன்பை வளர்த்து அருளாக்க வேண்டுமென்பதே அறத்துப்பால்.

அறமென்பது வயதிற்கு வயது மாறுபடும். ஒரே அறம் எல்லோருக்கும் பொருந்தாது. அதே சமயத்தில் ஒவ்வொருக்கும் தனித்தனியாக அறத்தை அமைக்க முடியாது. அதனால் தனிமனித வாழ்வை நான்கு பங்காகப் பிரிக்கிறார்கள். முதல்பங்கு கற்கும் பருவம். அடுத்த பருவம் வாழும் பருவம். அதாவது இல்லறம். அதற்கும் அடுத்த பங்கு ஓயத்தொடங்கும் பருவம். இறுதியாக ஓயும் பருவம் அல்லது துறவறம். இந்தப் பிரிவு இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும். படிக்கிற மாணவர்கள் இருக்கிறார்கள். அடுத்தது திருமணமானவர்கள் இருக்கிறார்கள். ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்கள். ஓய்வையும் தாண்டியோ அல்லது அதற்கு முன்னதாகவோ பற்றை விடுத்து துறவிகளாக உள்ளவர்கள் இருக்கிறார்கள். இதில் வள்ளுவர் கற்கும் பருவத்தையும், ஓயத்தொடங்கும் பருவத்தையும் இல்லறம் மற்றும் துறவறத்தின் தொடக்க நிலையாகக் கருதி அவற்றை விடுத்து மற்றைய இரண்டு அறங்களை விவரிக்கிறார்.

இல்லறம் என்பது அன்புப் பயிற்சிக்களம். இதுவரை அன்பைப் பெற்றுக்கொண்ட ஆணும் பெண்ணும், அதனைப் பகிர்ந்து அன்பென்றால் யாதென அறிந்து கொள்ளுமிடம். அவ்வன்பு மேன்மேலும் பிள்ளைகளிடம் எந்த வித எதிர்பார்ப்புமின்றி விரிவடைகிறது. இல்லத்திற்குள் விளைந்த இவ்வன்பைச் சமுதாயத்தின்பாற் திருப்பும் முயற்சியின் முதற்படி விருந்து. அவ்விருந்திற்கான அடித்தளம் இன்முகம் மற்றும் இன்சொற்கள். இப்படி அன்பெனும் ஊற்றைப் பெருக்கித் தன்னை நாடி வரும் மற்றைய மூன்று நிலையினரைக் காத்து அரவணைத்தலே இவ்வறத்தின் மூல நோக்கம்.

பலர் பங்குபெறும் வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கொருவர் உதவிகளைக் கொண்டும் கொடுக்கும் நிலை வரும். பெற்றுக்கொண்ட உதவிகளுக்கு நன்றி மறவாமை நலம். அதுவே அறம். ஒரு கட்டத்தில் நன்றிக்கடன் பட்டவர்களே நியாயம் தேடி வந்தாலும் அவர்பால் சார்பு நிலையெடுக்காமல் நீதியின்பால் நிற்றல் அறத்தை வளர்க்கும். அப்படி நீதி சொல்வதற்கான அடிப்படைத் தகுதி மெய், மொழி, மனத்தால் தீவழி செல்லாது தன்னைத் தானே அடக்குதல். அப்படி அடக்கத்தால் சிறந்தோர் தத்தம் பொதுவாழ்விற்கிணங்க தொழிலுக்கேற்பவும், இடத்திற்கேற்பவும் சொல்லப்பட்டுள்ள ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் அடுத்த கட்டம்.

பொதுவெளியிற் ஒழுக்கமுடையவராய் இருந்தாலும் மனதில் வெளித்தெரியாது இருக்கும் அழுக்கு மனக்குற்றமாகும். அதில் முதலாவது பிறனுடைய இல்லாளை விரும்புதல். அம்மனக்குற்றத்தை முளையிலேயே கிள்ளியெறிதல் அவசியம். எப்பெரிய குற்றத்தை பிறர் தனக்குச் செய்தாலும், அக்குற்றத்தைப் பொறுத்து மனத்தளவிலும் மன்னித்தல் மாபெரும் மாண்பு. அப்படிப் பொறுக்காமை குற்றம். எல்லோரும் சமமாக இல்லாத இச்சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பது தவிர்க்க முடியாதது. அப்படித் தாழ்ந்த போதினும் தம்மினும் உயர்ந்தோரைப் பார்த்துப் பொறாமைப்படாது வாழ்தல் இல்லறத்தின் இலக்கணம். அவனிடம் இருக்கும் உயரிய பொருள் நம்மிடமில்லையே என்று அப்பொருளை அவனறியாது கவர்ந்து கொள்ள நினைத்தல் குற்றம். இதுவரை சொல்லிய அனைத்தும் மனக்குற்றங்கள். அடுத்தவர் இல்லாத விடத்து அவர்பற்றிப் புறங்கூறுதலும், பயனில்லாதவற்றைப் பேசிப் பொழுதை வீணாக்குவதும் சொற்குற்றங்கள். அடுத்தது மெய்யால் விளையும் தீவினைகள். அவ்வினைகளைச் செய்ய அஞ்சுதலே மானுடம். மேற்சொல்லப்பட்ட குற்றங்கள் யாவும் அன்பைக் குலைக்கும். அன்பைப் பெருக்க நினைப்போர்க்குத் தேவையற்றவை.

குற்றங்கள் அனைத்தையும் ஒழித்து தன்னைத்தானே சான்றோனாய் ஆக்கிக் தனக்காக வாழத் தொடங்கியவன் தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்காகத் தொண்டு செய்யத் தொடங்குகிறான். இதுபோன்ற பொதுச்சேவைகள் பிறர் அறியச் செய்யப்படுவதால் புகழ் விளையும். இல்லறத்தின் நோக்கம் அன்பை விருட்சமாக்கி இப்புகழை அடைவதுதான். இதனிலும் உயர்ந்த நிலை, யாரும் அறியாது தனிமனிதர்களுக்கு அவரவர் தேவையறிந்து செய்யும் ஈகை. புகழைக் கூட எதிர்பாராது செய்யப்படும் இப்பண்பே இல்லறத்தானின் உயரிய நிலை. பற்றில் தொடங்கிய இல்லறம், பற்றினை விடப்பழகும் கடைசிப் படிக்கட்டில் வந்து நிற்கும்.

மேற்சொன்ன உதவிகள் செய்ய அடிப்படை பொருள். அப்பொருளை அறத்தின் வழி ஈட்டுதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லுவது பொருட்பால். இங்கே பொதுவாழ்வை தொழிலுக்கேற்ப பிரித்து அறம் சொல்கிறார். பிரித்தல் என்றுவுடன் பயந்துவிட வேண்டாம். இது கிட்டத்தட்ட நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தைப் போலத்தான் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேலாண்மை, உற்பத்தி, விற்பனை, மற்றும் ஆராய்ச்சி. இவைதான் பிறவிக் குணங்கள். ஒருவனிடம் எதையும் உருவாக்கும் ஆற்றல் இருக்கும். ஒருவனிடம் எதையும் விற்கும் ஆற்றல் இருக்கும். ஒருவனிடம் மேலாண்மை. மற்றொருவனிடம் ஆராய்ச்சிக்குணம். இதில் மேலோங்கி இருக்கும் குணத்தை வளர்த்தெடுத்தால் அதில் வெற்றி நிச்சயமே. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த நான்கு பிரிவுகள் எல்லாவிடத்திலும் இருக்கும். மேலாண்மையின் கையே எல்லாவிடத்திலும் ஓங்கியிருக்கும். அதே போல ஆராய்ச்சியாளனுக்கு அதிக அங்கீகாரம் இருக்கும். இது நடப்பு எதார்த்தம். இவையெல்லாம் பிறப்பால் வரும் பிரிவுகள் அன்று. ஆனால் பிறவிக் குணங்கள். இன்னார்க்கு பிறந்ததனால் இக்குணம் தீர்மானிப்படுவதில்லை. ஆனால் பெற்றோரின் குணமே பிள்ளையிடம் மேலோங்க மரபியல் வழி வாய்ப்பதிகம். இதுவும் இன்றைய நடப்பே. ஆசிரியரின் மகன் ஆசிரியனாவதும், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆவதும் இதனால் தான். திருவள்ளுவர் இவற்றில் முதன்மையான மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான உத்திகளையும், நெறிமுறைகளையும் பொருட்பாலில் சொல்கிறார். அத்தோடு மற்றைய பிரிவுகள் சிறப்புப் பிரிவாதலால் அவற்றை மேலோட்டமாகத் தொட்டுக்காட்டியிருக்கிறார்.

இல்லறத்தான் கடமைகளை மட்டுமே செய்து கொண்டிருக்காமல், உற்சாகத்திற்காக அறம் பிறழாது இன்பம் உய்ப்பதற்குச் சொல்லப்பட்ட வழிமுறை காமத்துப்பால். காமம் என்றால் இன்பமென்று பொருள். இன்பமென்பது ஐம்புலன் அனுபவம். சிலவற்றில் ஒருபுலன் இன்பம் பெறும். சிலவற்றில் இருபுலன்கள் இன்பம் பெறும். ஆனால் ஐம்புலன்களும் ஒருசேர அனுபவிக்கும் இன்பம் ஆணும், பெண்ணும் மனமொன்றி, உடலொன்றி இல்லறத்தில் பெறும் இன்பம். அதனால் இல்வாழ்வின் ஆகச்சிறந்த அவ்வின்பத்தை இன்பத்துப்பால் காட்டுகிறது. இங்கே களவியல் என்னும் காதலும், கற்பியலும் சொல்லப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் இல்லையென்பதற்கு இதுவே சாட்சி. பின்னாளில் காதலின் பேரால் ஆணும், பெண்ணும் ஏமாற்றப்படுவது அதிகமானபோது ஏற்பாட்டுத் திருமணங்கள் வந்திருக்கக் கூடும். இவையெல்லாம் ஒரு சுழற்சியே.

இப்பூவுலகில் கிடைக்கும் எல்லா இன்பங்களும் ஒரு காலத்திற்குட்பட்ட சிற்றின்பங்கள். எப்படி நிரந்தரமான பேரின்பம் பெறுவது என்பதைச் சிந்தித்த சான்றோர்கள் அதற்காகக் கண்டறிந்த வழி பிறப்பற்ற வீடுபேறு. வீடுபேற்றிற்கான வழிமுறை துறவறம். பொருள் மீதும், இன்பத்தின் மீதுமுள்ள பற்றை முற்றும் முழுதாய் விலக்கி, தன் வாழ்வைப் பிறருக்காக அற்பணிக்கும் அருள் நிலை துறவறம். இல்லறத்தில் தொடங்கிய அன்புப் பயிற்சி தொடர்பில்லாதவர்களை நோக்கியும் பயணப்படுவதுதான் அருள். இவ்வறத்தின் முதற் பகுதி விரதம். அடுத்த பகுதி ஞானம்.

விரதம் என்பது இதுவரை இல்லறத்தின் வழி உய்த்து வந்த இன்பங்களை விடல். அதன் முதற்படி புலால் உணவைத் தவிர்த்தல். அடுத்தது எடுத்துக்கொண்ட குறிக்கோளில் உறுதியாக நிற்கும் தவம். அத்தவத்தில் இருந்து தவறிவிட ஏதுவாகப் பல வாய்ப்புகள் கிடைக்கும். அந்த நிலையிலும் மனம், மொழி, மெய்யை கட்டுக்குள் வைத்தல் அவசியம். உலகம் துறவியை நம்பி பற்பலவற்றைப் பார்வைக்குள்ளாக்கும். அவற்றைக் கவர்ந்து கொள்ள நினையாமை, எந்தவொரு உயிர்க்கும் தீங்கு விளைவிக்காத வாய்மை, பிறர் மீது எந்த நிலையிலும் கோபம் கொள்ளாத தன்மை, பிறவுயிர்களுக்குத் தீங்கு செய்யாத தன்மை, உணவிற்காக மட்டுமன்றி எதற்காகவும் உயிர்களைக் கொல்லாமை என்ற எல்லாப் பண்புகளும் விரதத்தில் அடங்கும்.

விரதத்தில் வெற்றிகண்ட துறவியின் அடுத்த நிலை ஞானம். இப்பிறப்பின் நிலையாமையை ஞானத்தால் உணர்ந்தால் இவ்வுடல் இன்பத்தின் மீதும், புறத்தில் உள்ள செல்வத்தின் மீதும் பற்று நீங்கித் துறவு வாய்க்கும். அப்படித் துறவு வாய்க்கையில் இப்பிறவி கடந்து ஐயம் திரிபின்றி இப்பிறப்பிற்கான காரணம் தொடங்கி, இறப்பைத்தாண்டி மறுபிறப்பு, மேலும் பிறவாத வீடுபேறு போன்ற எல்லாவற்றின் உண்மையையும் ஆன்மா உணரும். இந்நிலையே மெய்யுணர்தல். இந்த நிலையை அடைந்தாலும் ஆன்மாவிற்குள் அவித்த வித்து போல ஆசை ஒரு மூலையில் அடங்கிக் கிடக்கும். அது வாய்ப்புக் கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் முளைத்துவிடாமல் இருக்க அவா அறுத்தல் அவசியமாகிறது. இதுவே துறவிகள் அடையும் ஞானம்.

இதுதான் திருக்குறளின் மேலோட்டமான சாராம்சம். நுனிப்புல் மேய்ந்தவனுக்கே இவ்வளவு கிடைத்திருக்கிறதென்றால், இன்னும் ஆழத்தில் என்னவெல்லாம் கிடைக்கும். இப்போது சொல்லுங்கள்! இதனை நாம் கொண்டாடும் அளவிற்கு மேலாகக் கடைபிடித்திருந்தால் ஒட்டுமொத்த உலகமும் திருவள்ளுவருக்கென ஒற்றைச் சிலை இல்லாத நிலையினும் நம்மைத் தேடிவந்து நமது புகழ்பாடியிருக்கும். திருக்குறளை அரசியலுக்கு அப்பால் கடத்தி அதை இந்த உலகின் பார்வைக்கு நமது செயல்களால் இட்டுச்செல்வதே நமது தாய்மொழியாம் தமிழுக்கும், அந்த ஒப்பற்ற தமிழ்ப்புலவன் வள்ளுவனுக்கும் செய்யும் நன்றிக்கடன். மற்றவை யாவும் வெறும் உணர்வு மிகுதியாலும், ஓட்டுவாங்குவதற்காகவும் செய்யும் செயலே.

- அழகப்பன் அண்ணாமலை

Comments

  1. அறத்துப் பால் பற்றி நல்ல ஆய்வு. மிக அருமை! இக்கட்டுரையில் என் மனதில் நின்றது-
    1. கொல்லாமை வலியுறுத்தக் கொல்வதேன்? - 'உண்மையில் திருக்குறளை வரிக்கு வரி ஏற்கும் எவராலும் எவர் மீதும் வெறுப்பை அள்ளித் திணிக்கின்ற கருத்தைக் கையிலெடுக்க முடியாது என்பதே உண்மை. உயிர்க்கொலையை தடுக்கிறோம் என்ற கொள்கையுடையோர் மானுட உயிர்களை எடுத்து அதை நிறுவப் பார்க்கும் உலகத்திற்கு திருக்குறள் ஒரு புரியாத புதிர்.'
    2. நான் புதிதாகக் கற்றது, சாதியில்லாத் தொழிற் பாகுபாடு- 'பிரித்தல் என்றுவுடன் பயந்துவிட வேண்டாம். இது கிட்டத்தட்ட நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தைப் போலத்தான் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேலாண்மை, உற்பத்தி, விற்பனை, மற்றும் ஆராய்ச்சி.'
    3. தந்தையறிவு மகனறிவு! - இந்தச் சிந்தனையை நான் வரும்பும் நாலடி திருக்குறளிலிறுந்து கொண்டது என்பதை இன்று அறிந்தேன்.
    4. தமிழ் நாட்டில் எற்பாட்டுத் திருமணம் ஒரு காலத்திலில்லை 'பழங்காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் இல்லையென்பதற்கு இதுவே சாட்சி.'
    5. பிறப்பறுக்க அவா அறு!

    மிக அருமை தொடரட்டும் !

    ReplyDelete
    Replies
    1. தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி!

      Delete

Post a Comment

Popular Posts